சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும் முன்பே பெய்து வரும் கன மழையால் சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உட்பட 4 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். கோயம்பேடு மேட்டு குளத்தில் பீகார் மாநில கட்டிட தொழிலாளி ஷபாச் அலாம்(26) என்பவர் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். சூறை காற்றால் அவரது வீட்டின் தகரத்தால் ஆன மேற்கூரை சிதலமடைந்தது. இதையடுத்து ேநற்று காலை 6.30 மணிக்கு சிதலமடைந்த இரும்பு தகரத்தை சரி செய்ய ஷபாச் அலாம் வீட்டின் மேற்கூரையில் ஏறியுள்ளார். அப்போது வீசிய காற்றால் நிலை தடுமாறிய அவர் பின்பக்கமாக மின்சார கம்பியில் தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல், சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் 1 வது தெருவைச் சேர்ந்தவர் பாலன். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு கண்ணன் (75) என்ற வளர்ப்பு மகன் உள்ளார். பலத்த மழையால் கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள கண்ணன் வீடு மற்றும் தாழ்வான பகுதியில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது கண்ணன் தன் வீட்டு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படியே அவர் கட்டிலில் இருந்து நீரில் விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பார்த்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.