திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்,’ என்று கேரள அரசுக்கு தேவசம் போர்டு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. பக்தர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் 2,000 பேரும் தரிசனம் செய்யலாம். கடந்த மண்டல காலத்தின் தொடக்கத்தில் தினமும் சராசரியாக 3.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் இந்த ஆண்டு தினமும் சராசரியாக 10 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இதனால், திருவிதாங்கூர் தேவசம் போர்டு திணறி வருகிறது. எனவே, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசிடம் தேவசம் போர்டு ஏற்கனவே கோரிக்கை வைத்தது.