புயல் - மழை பேரிடரிலிருந்து நம் மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: புயல், மழை பேரிடரிலிருந்து நம் மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் வாரீர் என திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு-குடிநீர் வழங்குவதற்கும் திமுக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுகிறேன். புயல்-மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கிடக் கோருகிறேன். பேரிடரிலிருந்து மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர். ‘நிவர்’ புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும் திமுகவினர் உதவும் கரங்கள். வடகிழக்குப் பருவமழை முற்றுப் பெறும் வரை, மக்களைப் பாதுகாப்பது நமது

கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* எஸ்.எஸ்.ஆர். மகன் திமுகவில் இணைந்தார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், சென்னை தெற்கு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும்-இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகனும், முன்னாள் எம்பியுமான ராஜேந்திரகுமார் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி எம்.எல்.ஏ., ஆ.இராசா எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: