நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் டாக்டர்கள் தயாராக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: நிவர் புயல் காரணமாக மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். நிவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், ஆகியோர் இணை, துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிவுறுத்தல் பின்வருமாறு: இடி, மின்னல் பாதிப்பு, பாம்பு மற்றும் பூச்சு கடிகள் போன்றவற்றிற்கு  தேவையான மருந்துகளை தேவையான அளவில்  கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்திலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அணைவரும் பணியில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை வைத்திருக்க வேண்டும். காய்ச்சல்களை கண்காணிப்பதுடன் உடனுக்குள் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கிய அறிவுறுத்தலில், சென்னையில் உள்ள அனைத்து சேவை துறைகளும் சாலை வெட்டு பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மழை அதிகளவு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாலையில் உள்ள அனைத்து பள்ளங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். துணை ஆணையர் மேகநாத ரெட்டி, சாலை, மழைநீர் வடிகால், நடைபாதை பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் எந்தவித அடைப்பும் இல்லாமல், தண்ணீர் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து பொறியாளர்களுக்கும் தலைமை பொறியாளர் நந்தக்குமார் வழங்கிய அறிவுறுத்தலில், அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த மாதம் 29ம் தேதி தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் பம்புகள், மரம் வெட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் இருக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: