ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்: தடையை மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.!!!

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என்றும்  சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அதிக முக்கியத்துவத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது, என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: