சுவர் துளையில் சிக்கிய நாய் மீட்பு: பொதுமக்கள் பாராட்டு

ஆவடி: ஆவடியில் வீட்டு சுவரில் இருந்த துளையில் சிக்கிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும், இச்செயலை பொதுமக்கள் பாராட்டினர். ஆவடி அடுத்த சேக்காடு, ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் மழைநீர் செல்வதற்காக பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டு பிளாஸ்டிக் பைப் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அந்த துளையில் நாயின் கழுத்து சிக்கி கொண்டது. அதிலிருந்து நாய் வெளியேற முடியாமல் அவதிப்பட்டது.   இதனை பார்த்த, பொதுமக்கள் சென்னை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கிருந்து ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தீயணைப்பு அதிகாரி வீரராகவன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு, அவர்கள் ஒரு மணி நேரம் போராடி சுவரை உடைத்தனர். பின்னர், அதில் சிக்கிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு, உயிர் தப்பிய நாய் அங்கிருந்து மகிழ்ச்சியில் தெருவில் துள்ளி குதித்து ஓடியது. மேலும், தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: