தர்மபுரியில் விவசாய கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்குபின் மீட்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி.!!!

தர்மபுரி: தர்மபுரியில் விவசாய கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்குபின் மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள ஏரிபஞ்சப்பள்ளி என்ற இடத்தில் வெங்கடாச்சலம் என்ற விவசாயி  ஒருவரின் கிணறு உள்ளது. இதற்கிடையே, வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியில் வந்த பெண் குட்டி யானை இன்று அதிகாலையில் அந்த கிணற்றில் விழுந்தது. தகவலளிந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த  வனத்துறையினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த யானையை மீட்க காலை முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கிரேன் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்று வந்த நிலையில், 10 அடி உயரத்திலிருந்து யானை கிணற்றின் பக்கவாட்டில் விழுந்தது. யானை விழுந்து வலியில் துடித்தது பொதுமக்கள் மத்தியில்  வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 15 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் போராடி, குட்டி யானையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  சிகிச்சை முடிந்து யானை வனப்பகுதியில் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின் யானை மீட்கப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: