சென்னை: சிம்புவின் ஈஸ்வரன் படக்குழுவிற்கு இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது. மேலும் சிம்பு ஒரு பாம்பைப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனைதொடர்ந்து சிம்பு பாம்பைத் துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.