எதார்த்த அணுகுமுறையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் கேட்டு பேரம் பேசமாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின்  மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தினேஷ் குண்டுராவ் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான நடவடிக்கைகளை கட்சி தொடங்கியுள்ளது.  வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது.நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற  விஷயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பீகாரில் மக்களவை தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும்  வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதைபோன்றே மக்கள்  ஆதரவு இனியும் தொடரும்.வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100  தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும்  வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக  முதல்வராக அமர வைக்க காங்கிரஸ் பணியாற்றும். தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: