சிட்லபாக்கம் பகுதியில் ஏரி புறம்போக்கில் வசிப்பவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிட்லபாக்கம்  ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும்படி தாமோதரன் உள்பட 154 பேருக்கு பொதுப்பணித் துறை  நோட்டீஸ் வழங்கியது.  இதை ரத்து செய்ய கோரியும், பட்டா வழங்க கோரி தாங்கள் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கோரியும் தாமோதரன்  உள்பட 154 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் மின்னணு ஆவணங்களின்படி இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் எனவும், ஏரி புறம்போக்கு நிலம் என்று  பொதுப்பணித்துறை கூறுவது தவறு என்றும், பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை  இணைத்து பதிலளித்துள்ளதாகவும், கொரோனா மற்றும் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை நோட்டீஸ் மீதான  நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட  வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே  இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றிற்கு மனுதாரர் அளிக்கும் விளக்கங்களை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு மனுதாரர்கள் அளித்த பதில் மற்றும் அவர்களின்  கோரிக்கை மனுவை பரிசீலித்து 4 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.அதுவரை, பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான மேல்நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  முடித்துவைத்தனர்.

Related Stories: