சென்னை: சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும்படி தாமோதரன் உள்பட 154 பேருக்கு பொதுப்பணித் துறை நோட்டீஸ் வழங்கியது. இதை ரத்து செய்ய கோரியும், பட்டா வழங்க கோரி தாங்கள் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கோரியும் தாமோதரன் உள்பட 154 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் மின்னணு ஆவணங்களின்படி இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் எனவும், ஏரி புறம்போக்கு நிலம் என்று பொதுப்பணித்துறை கூறுவது தவறு என்றும், பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து பதிலளித்துள்ளதாகவும், கொரோனா மற்றும் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.