சென்னை: சென்னை பெருநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து, குறைந்துள்ளது. ஏரியில் 82 விழுக்காடு அளவிற்கு நீர் நிரம்பியுள்ள சூழலில், உபரிநீர் திறக்கம் திட்டம் எதுவும் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி மிகப்பெரியதாகும். இந்த ஏரியின் உச்ச நீர்மட்டம் 24 அடி என்கிற நிலையில், மாலை நிலவரப்படி 21 புள்ளி 20 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3685 மில்லியன் கன அடியாகும். தற்போது, மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2908 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. இது, ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 82 விழுக்காடாகும்.