சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஆதாரத்துடன் புகாரளிக்கலாம் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்கள் குறித்து நீதிபதி கலையரசன் விசாரித்து வருகிறார். துணை வேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து தமிழக அரசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, கலையரசன் சென்னையில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வாவை சந்தித்து, தாம் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை பெற்றுக் கொண்டார். மேலும், சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான முழு விவரங்கள், அதற்கான ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.