சென்னை: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் கற்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கோரியுள்ளார். இது தமிழர்களை களைக்க வைக்கும் முயற்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள வைரமுத்து, இதுபோன்ற செயல்களை தடுக்காமல் போனால் 50 ஆண்டுகளில் தமிழ் பேச்சு மொழியாக சுருங்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் எனவும் மத்திய அரசு விதிகள் வகுத்திருப்பதை பார்த்துத்தான் ‘விதியே விதியே’ என்ற பாரதி பாடல் எனக்குள் வினைப்பட்டது. தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாத, ஏன்? தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண்முன்னால் நிற்பது கண்டு பனிக்காற்றின் தளிரை போல் எங்கள் இதயம் நடுங்குகிறது.