திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் ரத்து

திருப்போரூர்: முருகன் திருத்தலங்களில் புகழ்பெற்ற கோயிலான, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். முருகப்பெருமான் அசுரர்களுடன் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர், விண்ணில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம், மண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர் என புராணங்களில் கூறப்படுகிறது. இதையொட்டி, இந்த கோயில்களில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில், கந்தசஷ்டி பெருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடக்கும். இதைதொடர்ந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், இந்தாண்டு கந்தசஷ்டி விழா, நாளை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், தினமும் சூர பொம்மைகளுடன் வீதி உலா மற்றும் 6ம் நாள் சூரசம்ஹார விழா நடத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு, கந்தசஷ்டி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 6 நாட்களும் கோயிலில் நடக்கும் லட்சார்ச்சனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவின் இறுதி நாளான 20ம் தேதி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அப்போது, கோயில் கொடியேற்றம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அவை கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதியின்றி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: