திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோயில் நிலத்தில் மதிற்சுவர் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான வேம்படி விநாயகர் கோயில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ளது. கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் வேம்படி விநாயகர் கோயிலை சுற்றிலும் மதிற்சுவர் அமைக்க 10.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கியது.
கோயிலையொட்டியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மதிற்சுவர் எழுப்பினால் நாங்கள் பிரதான சாலைக்கு செல்ல முடியாது. நீண்ட தூரம் சுற்றி வரவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் செல்வதற்காக வழிவிட்டு சுவர் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.