ஆன்ட்ராய்டு மொபைலில் 108 ஆம்புலன்ஸ் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் வசதி விரைவில் அறிமுகம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை, ஆன்ட்ராய்டு மொபைலில் 108 ஆம்புலன்ஸ் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் வசதி விரைவில் அறிமுகம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் நல்வாழ்வுத்துறையில் 108 ஆம்புலன்ஸ் சேவை மேலும் வலுப்பெற்றுள்ளது. 200 ஆம்புலன்ஸ்களை பொதுமக்களுக்கு கொடுக்க உள்ளோம். சர்வதேச அளவில் ஓரிரு மாதங்களில் இலக்கை நாம் எட்டிவிடுவோம். இதேபோல், ஆன்ட்ராய்டு மொபைலில் 108 ஆம்புலன்ஸ் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் புதிய நடைமுறையையும் நாம் விரைவில் கொண்டுவர உள்ளோம். அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாக இருக்கும். எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு இன்று தான் விண்ணம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும். அதனால், மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் டவுன்லோடு செய்து அனுப்பலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆண்டு 4,061 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளது. இது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ரேங்க் பட்டியல் திட்டமிட்டபடி 16ம் தேதி வெளியிடப்படும். 18 அல்லது 19ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும். இதையடுத்து வரலாற்று சிறப்புமிக்க 7.5 இடஒதுக்கீடு முறையின் படி அனைத்துப்பணிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து வருடங்களும் நாம் நேரடிக்கலந்தாய்வு மட்டுமே செய்கிறோம். இது கோவிட் காலமாக இருந்தாலும் உரிய விதிமுறைகளோடு நேரடி கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். நேர அடிப்படையில் திட்டமிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். இதேபோல், ஆள்மாறாட்டத்தை தவிர்க்கவும், எந்த தவறும் நடைபெறாமல் இருக்க சான்றிதழ்களை ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேர் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. இதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களை பொறுத்தவரையில் 304 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்.

இவ்வாறு கூறினார். 

Related Stories: