சென்னை: ஈஸ்வரன் திரைப்படத்திற்கான போஸ்டரில் பாம்பை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படப்பிடிப்பானது முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் வெளிவர தயார் நிலையில் உள்ளதாக இயக்குநர் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரைப்படத்தின் முதற்கட்ட போஸ்டரானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பை பிடித்தவாறு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் சிம்பு, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் பாம்பை துன்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இயக்குநர் சுசீந்திரன் திரைப்படம் குறித்து விளக்கம் அளித்திருந்தார்.