சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நவம்பர் இறுதி வரை மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருக்கிறது. இதனை கண்டித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழக அரசு காலம் தாழ்த்தினால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை என்பது நீதிபதிகள் வினித் கோத்தாரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.