தேர்தல்கள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்: பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது..மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!

சென்னை: பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் திரு. தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தனிப் பெரும் கட்சியாகப் பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது. ‘கொரோனா’ காலத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும், தேர்தல் ஆணையம் நடத்தியிருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிக்கிறது.

‘மகாகத்பந்தன்’  கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறினால்தான், நமது நாட்டில் ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதிப் படுத்தப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: