ஆற்காடு: ஆற்காடு தோப்புக்கானா ஆரணி சாலையில் நூலகம் அருகில் அரசு வடக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. தொடக்கப்பள்ளியில் 270 மாணவ மாணவிகள் கடந்த கல்வியாண்டில் படித்து வந்தனர். தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான வேப்ப மரம் கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மழை பெய்யும்போது விரிசல் வழியாக மழை நீர் உள்ளே சென்று தண்ணீர் தேங்குகிறது. இந்த கட்டிடம் மட்டுமின்றி பள்ளியின் மற்ற கட்டிடங்களும் ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது.