ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பட்டாசு வெடிக்க தடை: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் காற்று மாசுபாட்டால், வயது முதிர்ந்த மற்றும் சிறு குழந்தைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக கூடிய ஆபத்தில் உள்ள மக்களை பாதுகாக்கும் வகையில் பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தற்காலிக தடை விதிப்பது பற்றிய தனது தீர்ப்பினை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்திருந்தது.

டெல்லியிலும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில், அதனை கவனத்தில் கொண்டு நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க மாநில அரசு தடை விதித்தது.

இதனை பின்பற்றி மஹாராஷ்ட்ராவிலும் பட்டாசுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்புகளால், மராட்டியத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: