குன்னூர்: குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இதையடுத்து சிறுத்தையை வேட்டையாடியதாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். வனத்துறையின் ஆய்வில் இறந்தது 5 வயது பெண் சிறுத்தை என்பதும், சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.