இளம்பெண் பலாத்கார வழக்கில் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: இளம்பெண்ணை மிரட்டி காதலித்து கர்ப்பமாக்கிய வழக்கில் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கி ஊழியர். கடந்த 2015ம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்காக தொழிலாளர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வாங்குவதற்காக அங்கு சென்றார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு அவரை விரும்புவதாகவும், தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி மிரட்டி உள்ளார்.

வேறு வழியில்லாமல் அந்த பெண் சுரேசுடன் பேசி உள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட சுரேஷ், அந்த பெண்ணை மிரட்டி வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். தொடர்ந்து, உல்லாசமாக இருந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். மேலும் இதையே காரணம் கூறி, அடிக்கடி தொல்லை தந்ததால் அந்த பெண் செல்போன் நம்பரை மாற்றியுள்ளார். ஆனாலும் புதிய செல்போன் நம்பரை பெற்று உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் கர்ப்பத்தை கலைத்து விட்டு சுரேஷ் மீது வேப்பேரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கில் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, சுரேஷ் மீதான கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Stories: