புதுடெல்லி: நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? எனக் கேட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காற்று மாசு குறித்த மனுவை கடந்த 2ம் தேதி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, ‘டெல்லி, அதை சுற்றியுள்ள மாநில பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.