5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஓட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனூர் அணை(மதுரை) 10 செ.மீ, மதுரை விமானநிலையம், திருமங்கலம்(மதுரை), வாலிநோக்கம்(ராமநாதபுரம்), வத்திராயிருப்பு(விருதுநகர்), மதுரை தெற்கு தலா 7 செ.மீ, விளாத்திக்குளம், கோவில்பட்டி தலா 5 செ.மீ, பிளவக்கல்(விருதுநகர்), சோழவந்தான், எட்டயபுரம், சித்தாம்பட்டி(மதுரை) தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: