வேலூர்: வேலூர் பெங்களூரு ரோடு லாரி ஷெட்டில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கமாக பஸ்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று மாநகராட்சி மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9.25 ஏக்கர் பரப்பளவில் 46.51 கோடி மதிப்பீட்டில் வேலூர் புதிய பஸ் நிலையம் ஓரடுக்கு பஸ் நிலையமாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகி வருகிறது. இப்பணிகள் 2022ம் ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்பட்ட திருவண்ணாமலை குடியாத்தம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சித்தூர் மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன. புதிய பஸ் நிலையத்தின் ஒரு புறத்தில் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்க பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் பழைய பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள லாரி ஷெட் வளாகத்தை குறிப்பிட்ட மார்க்கங்களில் செல்லும் பஸ்களை இயக்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு பயணிகள் நிழற்குடை, இருக்கைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மாநகராட்சி அவசர, அவசரமாக செய்து வருகிறது.இங்கிருந்து நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் பொன்னுபாண்டி ஆகியோரிடம் கேட்டபோது, ‘நவம்பர் 1ம்தேதி முதல் திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படும். இதன் மூலம் பழைய பஸ் நிலைய நெருக்கடிக்கு தீர்வு காணப்படும்’ என்றனர்.