ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் புதிய பால தூண்கள் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடை காற்று நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு ரயில் பாலத்தில் மோதியது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய இருவழித்தட ரயில் பாலம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. கப்பல் செல்லும் கால்வாயில் தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கடலில் கிரேன் பொருத்திய மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு பாம்பன் கடலில் பலத்த காற்று வீசியது. அப்போது கயிறு அறுந்து மிதவை மேடை கடல் நீரோட்டத்தின் போக்கில் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது.