பாம்பன் பாலத்தில் மோதியது மிதவை மேடை ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை நிறுத்தம்

ராமேஸ்வரம்:  பாம்பன் கடலில் புதிய பால தூண்கள் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடை காற்று நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு ரயில் பாலத்தில் மோதியது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய இருவழித்தட ரயில் பாலம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. கப்பல் செல்லும் கால்வாயில் தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கடலில் கிரேன் பொருத்திய மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு பாம்பன் கடலில் பலத்த காற்று வீசியது. அப்போது கயிறு அறுந்து மிதவை மேடை கடல் நீரோட்டத்தின் போக்கில் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது.

கப்பல் செல்ல திறக்கும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் இருந்து 50 அடி தொலைவில் ஒதுங்கி நிற்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பக்க மேடையில் மோதி மிதவை மேடை நின்று விட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள், பாலத்தில் மோதி நின்ற மிதவை மேடையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்குப்பின் மிதவைப்பாலம் மீட்கப்பட்டு, தூண்கள் கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

Related Stories: