உரிய விதிமுறைகள் பின்பற்றவில்லை: கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!!

சென்னை: கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குநராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே, கல்லூரி கல்வி இயக்குனர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது.

தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. பணி மூப்பில் உள்ள தன்னை நியமிக்காமல், பூர்ணசந்திரனை நியமிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி முதல்வர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பூர்ணசந்திரன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து, நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், இறுதி விசாரணை நடத்தினார். தொடர்ந்து, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், உரிய விதிமுறைகளை பின்பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் பதவி நிரப்பப்பட வேண்டும். புதிய நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் காலக்கெடு விதித்துள்ளார்.

Related Stories: