நீடாமங்கலம்: வயலின் வரப்பில் தாவரங்களை வளர்ப்பதனால் நெற்பயிர்களை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமலேயே பாதுகாக்கலாம் என பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் செம்மங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப முகமையின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.அப்போது அவர் பேசுகையில், சம்பா மற்றும் தாளடி பருவநெல்சாகுபடி தற்போது மும்முரமாக நடை பெற்று வரும் இச்சூழலில் விவசாயிகள் வேளாண் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் நெல்சாகுபடியினை மேற்கொள்வது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் வேளாண்மைக்கு பக்க பலமாக இருக்கின்ற மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், மண்புழு மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் சேர்ந்து அழிந்து விடுகின்றன.எனவே வேளாண் சுற்றுச்சூழல் பாதுகாப்போடு நெல் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை தலைப்பில் பயிற்சி நடந்தது.பயிற்சியில் சிறப்பு அழைப்பாளர் டான் போஸ்கா வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் அருணா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.