புதுச்சேரி, :இந்துக்களுக்கு முதல் எதிரியே பாஜக தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் திருமாவளவன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும். இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாத காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியது. ஆனால், மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூறிவிட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ இடங்களை மத்திய அரசு பறித்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது.