சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம், அப்போலோ டாக்டர்கள், தமிழக உயரதிகாரிகள், ஜெயலலிதா உறவினர்கள் தீபக், தீபா என உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் இறுதியாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணையை முடித்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவிருந்தது. இந்த நிலையில் திடீரென அப்போலோ மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.