வியாபாரம் செய்வதுபோல் நோட்டமிட்டு நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கொள்ளை: பெண்கள் உள்பட 5 பேர் கைது

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த வல்லப்பாக்கம் பகுதியில் கடந்த  வாரம் அடுத்தடுத்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர்கள், 8 சவரன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின்படி வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24), ரஞ்சித் (23), கோட்டியப்பன் (50), துர்காதேவி (21), ஆராய் (45) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் அவர்களை, சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் அனைவரும், ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு பூண்டு, வெங்காயம் விற்பது, கேஸ் அடுப்பு சரி செய்வதாக கூறி தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவில் கொள்ளையடிப்பது தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து, வல்லப்பாக்கம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய 10 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: