பாளையில் காவலர் நினைவுதினம் அனுசரிப்பு: உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

நெல்லை: வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் நாடு முழுவதும் காவலர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம்தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று வீரவணக்க நாளை முன்னிட்டு பாளை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர்நீத்த காவலர்களின் நினைவு நடுகல்லுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 54 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டமோர், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், மாவட்ட எஸ்பிக்கள் நெல்லை மணிவண்ணன், தென்காசி சுகுணாசிங், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் மற்றும் உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடியிலும் காவலர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ரவுடிகளை துரத்தி செல்லும்போது குண்டுவீசி தாக்குதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்திற்கும் வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஆயுதப்படையில் உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Related Stories: