முதல்வர் எடப்பாடி தாயார் படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் நேரில் அஞ்சலி: அமைச்சர்கள், அதிகாரிகள், நடிகர், நடிகைகளும் அஞ்சலி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், நடிகர், நடிகைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு  சென்னை திரும்பினார்.  இதையடுத்து, நேற்று மாலை 5.15 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்து, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், முதல்வருடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி, ராஜேந்திரபாலாஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மற்றும் குடும்பத்தினர், நீதிபதி செல்வி வேலுமணி ஆகியோர் தவுசாயம்மாள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வி.பன்னீர்செல்வம், கே.எஸ்.தென்னரசு, சத்யா, விருகை வி.என்.ரவி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் விக்ரம் கபூர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் நசிமுத்தின், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர்  இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் கார்த்திக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் சங்கர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் தங்கவேலு,

முன்னாள் எம்பி மைத்ரேயன், ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராம ராஜா, வேல்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், திரைப்பட இயக்குநர்கள் டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், லியாகத் அலிகான், நடிகைகள் பூர்ணிமா, குட்டி பத்மினி, சித்ரா, சங்கீதா, நடிகர்கள் விஜய் சேதுபதி, அப்சல், உதயா, ரமேஷ் கண்ணா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் சுவாமிநாதன், இசையமைப்பாளர் தீனா ஆகியோர் நேரில் சென்று, தவுசாயம்மாள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: