திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் 4ம் நாள் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: இன்று மோகினி அலங்காரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி இரவு தொடங்கியது. வருகின்ற 24ம் தேதியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று முன்தினம் காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்திலும், இரவு முத்து பந்தல் வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத  மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

தொடர்ந்து 4ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்திலும், நேற்றிரவு சர்வ பூபால வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். முன்னதாக சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நான்கு மாடவீதி உலா, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்யாண மண்டபத்திலேயே சுவாமி அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார். மேலும், இன்றிரவு கருட வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.

Related Stories: