திருவிக நகரில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: ஒருவர் கவலைக்கிடம்

சென்னை: சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பழனி (46). தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பவானி (40). தம்பதியின் மகள் தேவதர்ஷினி (17). மகன் பிரகதீஷ் (11). இவர்கள், வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தனர். தரை தளத்தில் இவரது தந்தை சண்முகம் (75) வசித்து வருகிறார். நேற்று மதியம் சண்முகம் மாடிக்கு சென்றபோது, படுக்கையில் பவானி தனது மகன், மகளுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில், விஷ பாட்டில் கிடந்தது. 2வது மாடியிலிருந்த பழனி அலுவலகத்திற்கு சென்றபோது, பழனி கையை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மேலும் அவர் மின்விசிறியில் சேலையால்  தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததும் சேலை அறுந்து கீழே விழுந்ததும் தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தகவலறிந்து வந்த திருவிக நகர் போலீசார், 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக பழனி குடும்பத்தினர் தற்கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: