சென்னை: அரையாண்டு சொத்துவரி ரூ.5000க்குள் செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை 10% ஆக அதிகரித்தும், அரையாண்டு முடிந்து சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரித்தும் சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை, அப்படிச் செலுத்தத் தவறினால் 16வது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, சலுகை கொடுத்து பறிப்பது போல் உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் பலர் வேலையிழந்து குடும்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.