அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான ஒதுக்கீட்டில் உடன்பாடில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:  உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) 50 சதவீத இடங்களை அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். ஒதுக்கீட்டுக்கு பின்னர்தான் இந்த படிப்புகளுக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.  அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இதுதொடர்பாக நடைபெறவிருந்த ஆன்லைன் கலந்தாய்வு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு குறித்து நிலை குறித்து அரசியம் கேட்டு தெரிவிக்கப்படும் என்றார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, எவ்வளவு சீட்டுகளை நிரப்ப வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார். இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது.

எனவே, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் விரிவான வாதத்தை கேட்க வேண்டும். எனவே, இந்த வழக்கு நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் தரவேண்டும். வழக்கில் நீதிமன்றம் முன்வந்து தேர்வு குழுவையும் சேர்க்கிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: