சென்னை: வடக்கு உள் கர்நாடகாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த பின்னர், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தற்போது உள் கர்நாடகாவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 80 மிமீ மழை பெய்துள்ளது. நாகர்கோவில் 70 மிமீ, பாபநாசம், மயிலாடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி 60 மிமீ, இரணியல், சோலையார் 50 மிமீ, பூதப்பாண்டி, தூக்கலாய் 40 மிமீ, குளச்சல், தென்காசி, பெரியாறு 30 மிமீ மழை பெய்துள்ளது.