சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் யானை மீது யோகா பாபா ராம்தேவ் ‘பொத்’

மதுரா: மதுராவில் யானை மீது அமர்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு அறக்கட்டளை, குருகுலங்கள், தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், உலகம் முழுவதும் யோகா வகுப்புகள், முகாம்கள் நடத்தி யோகா கலையை பரப்பி வருகிறார். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பார்வையாளர்களுக்கு நேற்று வித்தியாசமான முறையில் யோகா செய்தார். யானை ஒன்றின் மீது அமர்ந்து பாபா ராம்தேவ் பல்வேறு ஆசனங்களை செய்தார். ஆசிரமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பாபா ராம்தேவ்வின் யோகாசனத்தை பார்த்தபடி இருந்தனர்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாமல் யானை, ஒருகட்டத்தில் லேசான நகன்றது. இதனால், யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் நிலைதடுமாறி கீழே பொத்தென்று விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாவலர்கள் பாபா ராம்தேவை தூக்கி விட முயன்ற போது, கீழே விழுந்த வேகத்தில் எழுந்து கொண்ட பாபா, தன் மீதுபட்ட மண்ணை தட்டி விட்டு சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார். 22 விநாடிகள் கொண்ட இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்த வீடியோ குறித்து கமென்ட் செய்த ஒருவர், ‘எதற்காக பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்தார்?’ என கேள்வி கேட்டுள்ளார். மற்றொருவர், இதற்கு முன் பாபா ராம்தேவ் மழை பெய்து ஈரமான தரையில் சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டி கடைசியில் தடுமாறி கீழே விழும் மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Related Stories: