பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது போராடும் டெல்டா மக்களை திசை திருப்பும் செயல்: திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது டெல்டா விவசாயிகளை திசை திருப்பும் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடியுள்ளார். கோவையில் திமுக முப்பெரும் விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய ஸ்டாலின்; தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கருணாநிதியின் திட்டங்கள் அனைத்தும் தமிழும் வளரட்டும்; தமிழர்களும் வாழட்டும் என்ற அடிப்படியில் இருக்கும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் திட்டங்கள், அரசு கஜானாவை தங்கள் வீட்டு கஜானாவுக்கு கொண்டு போகும் திட்டங்களாகவே இருக்கின்றன.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழிலாளர் வளர்ச்சியும் இல்லை என்று கோவை முப்பெரும் விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பதற்கு பதில் இல்லை. முதலீட்டார் மாநாட்டில் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் தயாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் விரோதிகள் கையில் தான் தமிழ்நாடு சிக்கியுள்ளது. பொய்களின் கூடாரமாக முதல்வர் பழனிசாமி மாறி கொண்டிருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணி இதுவரை நடக்கவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டதாக முதல்வர் சொல்வது பொய். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது போராடும் டெல்டா மக்களை திசை திருப்பும் செயல். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இதுவரை அமைக்கப்படவில்லை. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்கு அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: