லக்னோ,:‘இளம்பெண் பாலியல் பலாத்கார கொலையில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஸ்தியை கரைக்க மாட்டோம்’ என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நேற்றிரவு ஹத்ராஸ் திரும்பிய பின் கூறினர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறந்த பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக காவல்துறை தகனம் செய்தது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பேராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் இளம்பெண்ணின் தாய், தந்தை மற்றும் பெண்ணின் மூன்று சகோதரர்கள் லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.