காஸ் அடுப்பை பற்றவைத்தபோது தீவிபத்து சினிமா புரொடக்‌ஷன் ஏஜென்ட் உடல் கருகி இறந்தார்: வீடு முழுவதும் எரிந்து நாசம்

சென்னை: கோவையை சேர்ந்தவர் சந்திரன் (62). இவர், கடந்த 15 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, சினிமா புரொடக்‌ஷன் ஏஜென்டாக இருந்து வந்தார். கொரோனா காரணமாக அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சொந்த ஊரான கோவைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சமையல் செய்ய வீட்டில் உள்ள அடுப்பை சந்திரன் பற்றவைத்தார். ஏற்கனவே வீடு முழுவதும் காஸ் கசிந்து இருப்பதை கவனிக்காமல் அடுப்பை பற்றவைத்த போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதில் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்த நிலையில் காப்பாற்றும்படி சந்திரன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, அசோக் நகர், விருகம்பாக்கம் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடிய சந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீடு முழுவதும் பரவிய தீயை அணைத்தனர். மருத்துவமனையில் 60 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சந்திரன் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

Related Stories: