வங்காள தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல்..!!

டாக்கா: வங்காள தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடுமையான செயலாக இருக்கின்றன. இந்த சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி வங்காள தேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் ஒப்புதல் அளிப்பார். வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: