சென்னை: உதவி ஆய்வாளர் உடல் தகுதி தேர்வின் போது ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ராஜ்குமார் என்ற காவலரின் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 1,500 பெண்கள் உட்பட 5,500 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர். அதைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 1ம்தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த உடற்தகுதி தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வீதம் அழைக்கப்பட்டனர். மேலும் கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வராதவர்கள் மற்றும் 15 முதல் 20 வயதுள்ள பெண்கள் திருப்பி அனுப்பட்டனர்.