ஆந்திர நீதித்துறையில் தலையிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரமணா மீது முதல்வர் ஜெகன் மோகன் குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு பரபரப்பு கடிதம்

புதுடெல்லி ‘ஆந்திர நீதிமன்றங்களின் செயல்பாடுகளில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலையிடுகிறார்,’ என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் குற்றம்சாட்டி உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா. தற்போதுள்ள தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவிற்கு பிறகு, இவர்தான் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா மீது பரபரப்பான  குற்றச்சாட்டுகளை கூறி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் கோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான என்.வி.ரமணா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக உள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, 2019 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை  ஏற்றது. கடந்த ஆடசியில் நடந்த பல்வேறு முறைகேடுகளின் மீது எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அளிக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதால், அவற்றை பற்றி விசாரிக்க  உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் நீதிபதி என்.வி.ரமணா தலையிட்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணையை தடுக்கிறார்.

  ஆந்திர முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் தம்மலபதி சீனிவாஸ்  மீதான நில பரிவர்த்தனை முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள், நீதிபதி என்.வி.ரமணாவின் தலையீடு காரணமாக, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தால் தற்போது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவர் மீதான மோசடி புகார்கள் மீதான விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.  கடந்த செப்டம்பர் 15ம் தேதி அமராவதியில் நடந்த நில முறைகேடு தொடர்பாக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு தாக்கல் செய்த எப்ஐஆர் விவரங்களை செய்தியாக வெளியிடக் கூடாது என, மாநில உயர்  நீதிமன்றம் ஊடகங்களுக்கு தடை விதித்தது.

 இதிலும், நீதிபதி என்.வி.ரமணாவின் தலையீடு கண்டிப்பாக உள்ளது. அமராவதியில் உள்ள நீதிபதி என்.வி. ரமணாவின் 2 மகள்களும், அவர்களை சார்ந்தவர்களும் மேற்கூறிய விசாரணைகளில்  தலையிட்டு வருகின்றனர் ஆந்திர மாநில ஆட்சியை கவிழ்க்க சதி செய்யப்படுகிறது. அதனால், நீதிபதி என்.வி.ரமணா  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: