சென்னை: ஆன்லைன் முறையில் புதிய மின்இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் எஸ்எம்எஸ்சில் கிடைக்கும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாழ்வழுத்த பிரிவில் குடிசை மற்றும் விவசாய மின்இணைப்பு தவிர இதர புதிய மின்இணைப்பு, மின்பளு அதிகரித்தல் அல்லது குறைத்துக்கொள்ளுதல் தொடர்பான இணையதள விண்ணப்பங்கள் மீதான செயல்பாடுகள் தொடர்பாக மின்வாரியம் ஏற்கனவே சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, விண்ணப்பத்தின் முழுமையான நிலை என்ற பகுதியில் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து, சேவை இணைப்பு வழங்கப்பட்ட தேதி வரையில் அனைத்து தகவல்களும் முழுமையாக வழங்கப்பட்டிருக்கும். எனவே, தேவையில்லாத மாறுதல்கள், பதிவுகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். தாமதங்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரரின் குறைகளை உள்ளிடுவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.