நெய்வேலி : நெய்வேலி அருகே 3 ஆண்டுகளை கடந்த நிலையில், பயன்பாடு இன்றி மண்புழு தயாரிப்பு கூடம் மக்கி வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். நெய்வேலி அடுத்த தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மண் புழு தயாரிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017- 2018 ன் கீழ், ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு தயாரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த மண்புழு தயாரிப்பு கூடம் கட்டப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் கடத்தும் இதுநாள் வரையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், மக்கி வீணாகி வருகிறது.