டிரைவர் திடீர் பிரேக் போட்டதில் பஸ் கண்ணாடி உடைந்து வெளியே விழுந்த கண்டக்டர்: வடிவேல் பட பாணியில் சம்பவம்

சென்னை: ஆவடியில் சாலையின் குறுக்கே குழந்தை ஓடி வந்ததால் டிரைவர் பிரேக் போட்டதில், கண்டக்டர் பஸ்சின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே விழுந்து காயம் அடைந்தார். ஆவடி போக்குவரத்து பணிமனையில் இருந்து பூந்தமல்லிக்கு (தடம் எண் 623) அரசு மினி பஸ் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் சேகர் ஓட்டினார். மேலும், கண்டக்டராக ஆறுமுகம் இருந்தார். அப்போது, அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்த பஸ் ஆவடி, காமராஜர் நகர் வழியாக வந்து கொண்டிருந்தபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று சாலையின் குறுக்கே திடீரென்று ஓடி வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் ஆறுமுகம்  நிலை தடுமாறி முன்பக்க கண்ணாடி மீது மோதி பஸ்சின் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே விழுந்தார். இதில், ஆறுமுகத்துக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. மேலும்,  கண்ணாடி உடைந்து நொறுங்கியதில், டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்வார்.

அப்போது, கண்டக்டர் விசில் அடிக்க, டிரைவர் திடீரென்று பிரேக் போடுவார். அப்போது, வடிவேலு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு தரையில் விழுவார். அதுபோல, ஆவடியில் நடந்த  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: