கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கொரோனா சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 22ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தநிலையில் 28ம் தேதி அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தொற்று ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருவரும் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 2ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தநிலையில், விஜயகாந்த் நேற்று இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிற்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: